ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்த இயக்குனர் கவுதமனை கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்த இயக்குனர் கவுதமனை கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்


மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமனை காவல்துறையினர் சனிக்கிழமை கண்மூடித்தனமாக தாக்கினர்.
மதுரை அவனியாபுரத்தில் காலை முதலே ஜல்லிக்கட்டு வேண்டும் என இளைஞர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த போராட்டக்காரர்களின் எண்ணிக்கை நேரம் செல்ல செல்ல பெரிய அளவில் உருவெடுத்தது.
கூட்டத்தை கட்டுப்படுத்த திணறிய காவல்துறையினருடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, காலை 11 மணியளவில் பிரபல இயக்குனர் அமீர், நடிகர் ஆர்யா, அவரது சகோதரர் சத்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் கவுதமன் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தனர்.
தொடர்ந்து ஏராளமானோர் திரண்டு வருவதால் பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திடீர் தடியடியில் ஈடுபட்டனர்.
அப்போது இயக்குனர் கவுதமன் மீதும் காவல்துறையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சிலரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
போராட்டக்காரர்கள் திடீரென்று பின்நோக்கிச் செல்வதும், பின்னர் முன்னேறி வருவதுமாக உள்ளதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.