' தீபா வருகையால் என்ன நடக்கும்?' -உளவுத்துறை அறிக்கையைக் கேட்ட ஓ.பி.எஸ்

' தீபா வருகையால் என்ன நடக்கும்?' -உளவுத்துறை அறிக்கையைக் கேட்ட ஓ.பி.எஸ்


எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரசியல் பிரவேசத்தை அறிவிக்க இருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ' உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தீபாவின் செயல்பாடுகள் பற்றியும் அவரது வருகையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதைப் பற்றியும் அறிக்கை கேட்டு வாங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பிறகு, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியானது. ஆனால், கடந்த சில நாட்களாக தீபாவை முன்னிலைப்படுத்துகின்றன ஊடகங்கள். அ.தி.மு.கவில் உள்ள நிர்வாகிகள் சசிகலா பின்னால் அணிவகுத்தாலும், தொண்டர்களின் மனநிலை வேறு மாதிரியாக இருக்கின்றது. " அம்மா தலைமையால் நல்லது நடக்கும் என்று நினைத்துத்தான் மீண்டும் ஆட்சியில் அமர வைத்தார்கள் மக்கள். ஆனால், ஆறே மாதங்களில் அவர் இறந்துவிட்டார். அவர் மரணத்தில் உள்ள மர்மம் பற்றியும் மக்களுக்கு விளக்கவில்லை. பொதுச் செயலாளராக சசிகலா இருக்கும்வரையில் அம்மா பற்றிய எந்தச் செய்தியும் வெளியில் வராது. அதுவே, தீபாவை முன்னிலைப்படுத்தினால், அம்மா பற்றிய விவரங்கள் வெளியில் வரும்' என தொண்டர்கள் நம்புகின்றனர். அதனால்தான், ஜெயலலிதா மீதான பற்றுதலில் இருக்கும் பல கிராமங்கள், தீபா பின்னால் அணிவகுக்கின்றன. சொந்தப் பணத்தைச் செலவு செய்து பிரமாண்ட பிளக்ஸ் போர்டுகளை வைக்கின்றனர். ' நான் வர வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கான அவசியம் வந்தால் அரசியலில் கால் பதிப்பேன்' என தொடக்கத்தில் பேட்டியளித்தார். தற்போது அதற்கான சூழல்கள் வந்துவிட்டன" என நெகிழ்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு நாள்தோறும் மக்கள் கூட்டம் குவிந்து வருவதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.மாவட்டங்களில் தீபாவை முன்னிலைப்படுத்துவதை அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்த்தும், அஞ்சாமல் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர் தொண்டர்கள். பல ஊர்களில் இருந்து சொந்தக் காசை செலவு செய்து மக்கள் வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் காட்சி தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தீபா. இந்நிலையில், தீபாவின் வருகை குறித்து உளவுப் பிரிவு அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டிருந்தார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். ' தினம்தோறும் அவரைப் பார்க்க வருகின்றவர்கள் யார்? அவரை முன்னிலைப்படுத்துவது யார்? உண்மையிலேயே அவரைப் பார்க்கத்தான் மக்கள் குவிகின்றனரா? அவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுகிறதா? கட்சி நிர்வாகம் குறித்து ஏதேனும் பேசுகிறார்களா? அவர் அரசியலில் நுழைந்தால், அ.தி.மு.கவிற்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? அவரை இயக்குவது யார் என்பது குறித்து விரிவான குறிப்புகளைத் தயார் செய்தனர் உளவுப் பிரிவு அதிகாரிகள். ஓ.பி.எஸ்ஸிடம் அளித்த அறிக்கையில், ' தீபாவின் வளர்ச்சி உங்களுக்கு லாபம். உங்களுக்கு எதிராக நடப்பதற்கு எதுவும் இல்லை' எனத் தெரிவித்துள்ளனர். கார்டன் தரப்பில் இருந்து உளவுத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை எதுவும் கேட்கவில்லை என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
" ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது கார்டன். தற்போது புதிதாக முளைத்துள்ள தீபா விவகாரம், கடும் தலைவலியாக மாறிவிடக் கூடாது என்பதில் மன்னார்குடி உறவுகள் தெளிவாக இருக்கின்றனர். தீபாவை எந்த வகையில் சமாதானப்படுத்துவது என்றுதான் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அவர் குறித்த எதிர்மறையான தகவல்களைப் பரப்பும் பணிகளையும் தொடங்கியுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்குவதால், அச்சத்தோடு எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இதுகுறித்த எந்தக் கவலையும் இல்லாமல், தலைமைச் செயலகப் பணிகளை உற்சாகமாக செய்து வருகிறார் பன்னீர்செல்வம். சசிகலா, ஸ்டாலின், மத்திய அரசு என யாரையும் எதிர்க்காமல், முதலமைச்சராகவே நான்கரை ஆண்டுகாலத்தை நிறைவு செய்யும் திட்டத்தில் இருக்கிறார். ஆட்சி அதிகாரத்திற்குள் மன்னார்குடி உறவுகளின் தலையீடுகளையும் கவனித்து வருகிறார்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
ஜனவரி 17 அன்று தீபாவின் அரசியல் பிரவேசம் அதிர வைக்குமா? அடங்கிப் போகுமா என்ற கேள்விகளும் தொண்டர்கள் மத்தியில் வலம் வருகிறது.