பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க புது திட்டம் : டிஜிட்டலுக்கு மாற மறுப்பவர்களை மிரட்ட வருகிறது ‘ரொக்க வரி’

பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க புது திட்டம் : டிஜிட்டலுக்கு மாற மறுப்பவர்களை மிரட்ட வருகிறது ‘ரொக்க வரி’

புதுடெல்லி: பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க செய்யும் வகையில், பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அடுத்த மாதம் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே வங்கி கணக்கில் இருந்த பணத்தைக் கூட எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பணம் எடுக்க கெடுபிடிகள் இருந்தன. பணம் இருப்பு இல்லாததால் குறைந்தபட்ச உச்சவரம்பு தொகையை கூட தர முடியாமல் வங்கிகள் திண்டாடின.
கையில் பணம் இல்லாததால் பெரும்பாலான தொழில்கள் முடங்கின. மக்களும் தங்கள் அத்தியாவசிய செலவுகளை குறைத்துக்கொண்டனர். அதேநேரத்தில், கார்டு மூலமான பரிவர்த்தனை ஒரு மாதத்திலேயே 4 மடங்கு அதிகரித்தது. டெபிட் கார்டில் ஒரு முறை கூட பொருள் வாங்காதவர்கள் கூட, வேறு வழியின்றி கார்டு பரிவர்த்தனைக்கு மாறினர். ஆனால், நகரங்களில் மட்டுமே இது சாத்தியமானது.
கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்குவிக்க அவற்றுக்கான கட்டணங்களும் டிசம்பர் இறுதி வரை நீக்கப்பட்டன. அதோடு பரிசு திட்டங்களையும் அரசு அறிவித்தது. ஆனால், கட்டாய சூழலால் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த மக்கள், ஏடிஎம்களில் வரிசையில் நின்றாவது பண பரிவர்த்தனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி பண பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை கூட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வைக்க மத்திய அரசு புது வியூகம் வகுத்துள்ளது. அதன்படி, பண பரிவர்த்தனை செய்வோருக்கு ரொக்க வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்வர்களுக்கு சில கட்டணங்களை நீக்குவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. அதோடு, பண பரிவர்த்தனையை குறைக்கவும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.
முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் டெபாசிட் செய்வது அல்லது எடுப்பதற்கு ரொக்க பரிவர்த்தனை வரி வசூலிக்கப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது. இதே போன்றுதான் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு புதிய வரி விதிப்பு கொண்டுவரப்படும். இதிலுள்ள சாதக பாதங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
இதன் நோக்கம் பண பொருளாதாரத்தை குறைத்து டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதுதான். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்தே டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்படிதான் ரொக்க வரி விதிப்பு குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், வரும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தனர். கருப்பு பணத்தை மீட்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, ₹3 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனையையும், ₹15 லட்சத்துக்கு மேல் தனி நபர் ரொக்கமாக இருப்பு வைக்க கட்டுப்பாடும் விதிக்க ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* பழைய நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு ஏற்பட்ட பண தட்டுப்பாட்டால், மக்கள் வேறு வழியின்றி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறினர்.
* கிராமங்களில் இவற்றால் பயனில்லை. நகரங்களில் மட்டும் இந்த பிளாஸ்டிக் கரன்சி கைகொடுத்தது.
* கடந்த ஆண்டு நவம்பரை விட டிசம்பரில் டிஜிட்டல் பரிவர்த்தனை 43 சதவீதம் அதிகரித்தது.
* கார்டு பரிவர்த்தனை சில வாரங்களிலேயே 4 மடங்கு வரை உயர்ந்தது.
* மொத்தம் சுமார் 95.8 கோடி பணமற்ற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
* டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசே பிரத்யேகமாக கொண்டுவந்த ரூபே கார்டு பெரும்பாலான ஸ்வைப் மிஷின்களில் பயன்படுத்த முடிவதில்லை.
* சலுகைகள் டிசம்பரோடு முடிந்து விட்டதால், கார்டு பரிவர்த்தனைக்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பது மக்களிடையே அதிர்ச்சியையும் தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
* ரொக்க வரி கொண்டு வந்தாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கட்டணங்களை நீக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.