ஜல்லிக்கட்டு எதிர்ப்புக்கு வழக்குக்கு தடை!
தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள வாரிய உறுப்பினருக்கு வாரிய செயலாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கை வாபஸ் பெறும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.
அஞ்சலி சர்மா
ஜல்லிக்கட்டு நடத்த கோரி, சென்னையில் மெரினா, மதுரையில் அலங்காநல்லூர் உள்பட தமிழகம் முழுவதும், ஜன., 17 முதல், 23ம் தேதி வரை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய அரசின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. மேலும், சட்டசபையில் அந்த சட்டத்தை நிறைவேற்றியும் உள்ளது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில், அதன் உறுப்பினரும், வழக்கறிஞருமான அஞ்சலி சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.இதை கண்டித்து, அஞ்சலி சர்மாவுக்கு இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளரும், ஐ.எப்.எஸ்., அதிகாரியுமான ரவிக்குமார் அனுப்பியுள்ள கடிதம்:
ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதுபோல், தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக, இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தால், அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
ஒப்புதல் தேவை
இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில், சுப்ரீம் கோர்ட் அல்லது பிற நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு முன், வாரியத்தின் ஒப்புதல் பெற்று அல்லது முடிவை அறிந்த பிறகு வழக்கு தொடுக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.