திவாகரன் பேச்சால் வெடித்தது கலகக் குரல்! மூத்த தலைவர்கள் போர்க்கொடியால் உடைகிறது அதிமுக?
அதிமுகவுக்கு உரிமை கோரும் வகையில் சசிகலாவின் தம்பி திவாகரன் பேசிய பேச்சு அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, திவாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுக உடைவது தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றால் அக்கட்சி உடைவது உறுதி என கூறப்பட்டு வந்தது. தற்போது சசிகலா அதிமுக பொதுச்செயலராக பதவியேற்று 15 நாட்களான நிலையில் கலகக் குரல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது இருந்தே தாங்கள்தான் பாதுகாத்து வருகிறோம் என சசிகலாவின் தம்பி திவாகரன் பேசிய பேச்சால்தான் இந்த போர்க்கொடி எழுந்துள்ளது. திவாகரன் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத திவாகரனின் பேச்சு கொந்தளிக்க செய்கிறது எனவும் கேபிமுனுசாமி கூறியுள்ளார். ஏற்கனவே அதிமுகவின் மூத்த தலைவர்கள் கேபிமுனுசாமி, பிஹெச் பாண்டியன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் சசிகலாவின் ஆதிக்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிக்க உள்ளார். இந்த சூழலில் கேபி முனுசாமி பகிரங்கமாக சசிகலா குடும்பத்துக்கு எதிராக கலககக் குரல் எழுப்பியிருக்கிறார்.
கேபி முனுசாமியின் கலகக் குரல் அதிமுக உடையக் கூடும் என்பதற்காக பிள்ளையார் சுழி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மன்னார்குடி கோஷ்டியின் ஆதிக்கம் தலைதூக்கும்; அதிமுக உடைவது தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.