மெரீனாவில் 3-வது நாளாக செல்போன் வெளிச்சத்தில் தொடரும் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மூன்றாவது நாளாக இரவில் செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. தொடர்ந்து போராடுவோம் வெற்றி பெறுவோம் என முழக்கமிட்டனர்.
மாணவர்கள் போராட்டம்
இந்தாண்டு பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.விடிய விடிய நடந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் கைது படலத்தை துவங்கினர். இது சமூக வலைதளங்கான வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவீட்டரில் பரவியதால் இளைஞர்கள், மாணவர்கள், பொங்கி எழுந்தனர்.
நேற்று முன்தினம் சென்னை மெரினாவில் குவிந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை துவக்கினர். முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் வந்து பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தை கலைக்க மின் சாரம் துண்டிக்கப்பட்டது. அதனையும் மீறி போராட்டக்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த செல்போனில் உள்ள டார்ச்லைட் வெளிச்சத்தில் போராட்டம் நடத்தினர்.
மூன்றாவது நாளாக போராட்டம்
இந்த போராட்டம் இன்றும் சென்னை மெரிவால் மூன்றாவது நாளாக தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக நேற்று இரவு டில்லி சென்ற முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பேச்சுவார்த்தை எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து டில்லியில் முதல்வர் பன்னீர் செல்வம் சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் சிலர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகர்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்த பீட்டா அமைப்புக்கு நன்றி, இருப்பினும், தொடர்ந்து போராடுவோம். வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம். எங்களின் உரிமையில் தலையிட யாருக்கும் தகுதியில்லை என்றனர்.
பல்வேறு அமைப்புகள் ஆதரவு
இந்நி்லையில் போராட்டம் மேலும் வலுவடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பரவலாகிவருகிறது. இதன் எதிரொலியாக வணிகர்கள் அமைப்புகள், லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம் , பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளன.
நாளை விடுமுறை
போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து நாளை மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தம்
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்ககு ஆதரவா மூன்றாவது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் இரவில் தொடர் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரம் அடைந்து வருவதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடப்பதால் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.