பண பயன்பாட்டை கட்டுப்படுத்த கட்டாய பான் உச்சவரம்பு 30,000 ஆக குறைக்க திட்டம்

பண பயன்பாட்டை கட்டுப்படுத்த கட்டாய பான் உச்சவரம்பு 30,000 ஆக குறைக்க திட்டம்

பண பரிவர்த்தனையை குறைக்கும் நடவடிக்கையாக, கட்டாய பான் எண் சமர்ப்பிக்கும் உச்சவரம்பை 30,000ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய 500, 1,000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு பண புழக்கம் அடியோடு ஸ்தம்பித்தது. தற்போது அடுத்த மாதத்தில் பணத்தட்டுப்பாடு சீராகும் வங்கிகள் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. இதற்கேற்ப ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாளொன்றுக்கு 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், 24,000 என்ற வார உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. வணிகர்கள் நடப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கும் உச்சவரம்பு 50,000ல் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் பணப்புழக்கம் விரைவில் சீராகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், இதை மத்திய அரசு ஆதரிக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பண புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு அளித்த பேட்டி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்த பேட்டியில், ‘‘பணத்தை செலவழிப்பதற்கான கட்டுப்பாடுகள், பான் எண்ணை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவு ஆகியவை ஊழலை ஒழிக்க வழி வகுக்கும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். செல்லாத நோட்டு மாற்றுவதிலும் பான் எண் மற்றும் ஆதார் எண் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இவற்றை கொண்டு தனிநபரின் பரிவர்த்தனையை கண்காணிப்பது எளிது என்பதால், மத்திய அரசு பரிவர்த்தனை கட்டுப்பாடு விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கையாக, கட்டாய பான் எண் சமர்ப்பிப்பதற்கான விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 50,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயமாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுபோல் 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவதற்கும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டது. அதேநேரத்தில், அசையா சொத்து வாங்க பான் எண் குறிப்பிடும் உச்சவரம்பு 5 லட்சத்துக்கு மேல் என இருந்தது 10 லட்சம் ஆக்கப்பட்டது. தற்போது, கட்டாய பான் எண் உச்சவரம்பு 50,000ல் இருந்து 30,000 ஆக குறைக்கப்படலாம் எனவும், இதுகுறித்து அடுத்த மாதம் 1ம் தேதி சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், கடைகளில் பொருள் வாங்கும்போது மேற்கொள்ளும் கட்டாய பான் உச்சவரம்பும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, பண பரிவர்த்தனை குறிப்பிட்ட அளவுக்கு மேல் மேற்கொள்வதற்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு இந்த வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் வரி கார்டு பரிவர்த்தனைக்கான ஸ்வைப்பிங் மிஷின்கள் வாங்க பயன்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, கருப்பு பண புழக்கம் மீண்டும் ஏற்படாமல் இருக்க பண பரிவர்த்தனையை குறைப்பதில் மத்திய அரசு வெகுவாக தீவிரம் காட்டி வருகிறது. இதன் அடிப்படையிலேயே இந்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நடைமுறையில் உள்ள கட்டாய பான்
* 10 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையா சொத்து வாங்குதல்.
* டூவீலர் தவிர இதர வாகனங்கள் வாங்குதல்.
* வங்கி கணக்கு துவக்குதல்.
* 50,000 மேற்பட்ட ஓட்டல், ரெஸ்டாரன்ட் பில்.
* 50,000க்கு மேற்பட்ட டிடி, காசோலைகள்.
* வெளிநாடு செல்லும்போது 50,000 மதிப்புக்கு மேற்பட்ட வெளிநாட்டு கரன்சி (டிக்கெட் கட்டணம், ஏஜென்ட் கமிஷன் உட்பட)
* 50,000க்கு மேல் வாங்கும் மியூச்சவல் பண்ட்கள், கடன் பத்திரங்கள்.
* ஜூவல்லரி, பொருட்கள், வைப்பு கட்டணம் 2 லட்சத்துக்கு மேல் இருந்தால்.
* கேஷ் கார்டு, பிரீபெய்டு 50,000க்கு மேல் இருந்தால்.