தமிழக அரசைச் சாடும் இந்தியாவின் தண்ணீர் மனிதர்!

தமிழக அரசைச் சாடும் இந்தியாவின் தண்ணீர் மனிதர்!



தமிழக அரசைச் சாடும் இந்தியாவின் தண்ணீர் மனிதர்!

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில், 'தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம்' சார்பில், காவிரி ஆறு மீட்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க வழக்கறிஞர் குருசாமி, நதிகள் பாதுகாப்பு இயக்கக் கூட்டமைப்பின் வழக்கறிஞர் தமிழகன், விவசாயச் சங்கங்களின் தலைவர்களான அய்யாக்கண்ணு, தீட்சிதர் பாலு, புலியூர் நாகராஜன், தண்ணீர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோராஜ் சேஷன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, "இந்தியாவின் தண்ணீர் மனிதர்" என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



நிகழ்ச்சிக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் ,

"இன்று காவிரி ஆற்றுப் பகுதிகளை நாங்கள் பார்வையிட்டோம். காவிரி, ராஜஸ்தான் பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்துவருகின்கிறோம். தமிழகத்தில் மண் வளம் சிறப்பாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் மட்டுமே வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக, நீதிக்குழு ஒன்று அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளை இணைத்து, தண்ணீர் விழிப்புஉணர்வு இயக்கம் நடத்த வேண்டும் .

வறட்சி ஏற்படுவதற்கு, ஆறுகளில் மணல் அள்ளுவதும் ஒரு காரணம். மணல் அள்ளுவதற்கான நெறிமுறைகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறையுடன் இணைந்து வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த ஒரு நீர்நிலைகளிலும் மணல் அள்ளக்கூடாது எனச் சட்டம் உள்ளது. அதை ஏன் தமிழக அரசு பின்பற்றவில்லை என்பதுதான் தெரியவில்லை. அடுத்தமுறை தமிழகத்துக்கு வரும்போது, தமிழக முதல்வரைச் சந்திக்கத் திட்டம் உள்ளது. அப்போது, நீர் ஆதாரங்களைக் காப்பதுகுறித்து முதல்வரிடம் விவாதிப்போம்

ராஜஸ்தானில் தண்ணீர் சேமிப்புத் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழு ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் குறைந்த அளவு மழையே பொழியும், ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது வறட்சி ஒழிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துடன் ஒப்பிடும்போது, பல மடங்கு அதிக மழைப் பொழிவைப் பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சில மாற்றங்களைச் செய்வதன்மூலம், வறட்சியை எளிதாக விரட்ட முடியும்.

நதிகளை இணைப்பதன்மூலம் தமிழகத்தில் வறட்சியை ஒழிக்க முடியாது. இது அரசியல் செய்வதற்கு மட்டுமே தீர்வைத் தரும். தேசிய நதிகளை இணைப்பதால், தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. இரு மாநிலங்களிலும் ஓடும் காவிரிப் பிரச்னையே தீரவில்லை. தேசிய நதிகளை இணைப்பதால் பிரச்னைகள் அதிகரிக்கும்.

தமிழகம், தண்ணீர் கேட்டு எந்த மாநிலத்திடமும் கையேந்தத் தேவையில்லை. இங்கு கிடைக்கும் மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, கிராம அளவில் சிறு சிறு குளங்களை வெட்டி, நீரைத் தேக்க வேண்டும். கிடைக்கும் மழைநீரும் பயன்பாடும் சம நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.