வாஸ்துவும் வர்ணங்களும்.. வீட்டிற்கு எந்தெந்த நிறங்களை பூச வேண்டும்..!
நாம் காதால் கேட்டு புரிந்து கொள்வதை விட கண்களால் பார்ப்பது நம் மனதில் எளிதிலும் ஆழமாகவும் பதியும். அதனால் தான் நம் பாடத்திட்டத்தில் கூட, நாம் படிப்பதை நாமே செய்து பார்த்து புரிந்து கொள்ள கற்றுக்கொடுக்கின்றனர்.
நம் கண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி, அதில் பதியும் பிம்பத்தை அப்படியே மனதில் நிறுத்திக்கொள்ளும். பின்னொரு சமயத்தில் அந்த பிம்பத்தின் பெயரை கேட்டாலே நம் கண்முன் அந்த பிம்பமே வந்து செல்லும். அதுவே எதையும் காட்சிப்படுத்தும் சக்தி என்பது....
இதை எதற்காக கூறுகிறேன் என்றால் நம்மை படைத்த கடவுள் எல்லா பொருட்களும் கருப்பு வெள்ளையாக இருந்தால் நமக்கு சலிப்பு தட்டிவிடும் என்று எண்ணியோ என்னவோ அனைத்தையும் பல வர்ணங்களாக்கியுள்ளான்.
நம் கண்கள் வர்ணங்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. அதிலும் நமக்கு ஒவ்வொரு வர்ணத்தை பார்க்கும் பொழுதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உண்டாகின்றன.
எடுத்துக்காட்டாக பூந்தோட்டத்தை பார்க்கின்றபோது கிடைக்கின்ற மகிழ்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளை பார்க்கின்ற போது கிடைக்கின்ற மகிழ்ச்சி, நீர் வீழ்ச்சியை பார்க்கின்ற போது கிடைக்கின்ற புத்துணர்வு என வெவ்வேறு மனநிலை தோன்றும்.
இதுபோன்ற உணர்ச்சிகள் நம் வீட்டிலும் நமக்கு ஏற்படுகின்றது. நம் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு உணர்வு நிலை உள்ளது. அதை சரியாக வெளிப்படுத்துவதும், தவறாக வெளிப்படுத்துவதும் நாம் அதற்கு பூசும் வர்ணங்களே தீர்மானிக்கின்றன.
பொதுவாக நாம் எல்லா அறைகளுக்கும் ஒரே நிறத்தையே எப்போதும் பூசுவது உண்டு. அப்படி செய்யும் பொழுது ஒரே மாதிரியான மனநிலை நமக்கு ஏற்படும். ஆனால் நாம் வேலை செய்யும்போது இருக்கும் மனநிலை உறங்கும்போது தேவையில்லை. அதேபோல சமைக்கும்போது இருக்கும் மனநிலை படிக்கும் போது தேவையில்லை. இதை சரிசெய்வதே அங்கு நாம் பூசும் நிறங்கள்.
சரி, அப்படியானால் எந்தெந்த அறைக்கு எந்தெந்த நிறங்கள் பூச வேண்டும் என்று பார்ப்போம். கட்டிடத்தின் வெளிப்பகுதிக்கு வெள்ளை அல்லது வெளிர் மஞ்சளே சிறந்தது. கட்டிடத்தின் உள்ளே வரவேற்பறைக்கு Off White என கூறப்படும் வெள்ளை நிறமும், படுக்கை அறையின் உள் சுவற்றிற்கு வெளிர் ஊதா நிறமும், சமையலறையின் உள் சுவற்றிற்கு வெளிர் ஆரஞ்சு நிறமும், படிக்கும் அறையின் உள் சுவற்றிற்கு வெளிர் பச்சை நிறமும் சிறப்பானவையாக இருக்கும். வீட்டின் வர்ணங்களை கொண்டு எண்ணங்களைத் தீட்டுவோம்....!