நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு: மரபணு சோதனை நடத்தக் கோரி மேலூர் தம்பதியர் புதிய மனு

நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு: மரபணு சோதனை நடத்தக் கோரி மேலூர் தம்பதியர் புதிய மனு

நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை நடத்தக் கோரி, மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஆஜரான தனுஷின் உடலில் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதனிடையே, நடிகர் தனுஷுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நடிகர் தனுஷ் என்னுடைய மகன் என்பதற்கு போதிய ஆதாரம் உள்ளது. அவரை 11-ஆம் வகுப்பு வரை நான் படிக்க வைத்தேன். இந்நிலையில், அவரது தற்போதைய சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, உண்மையான பெற்றோராகிய எங்களை அவரது பெற்றோர் இல்லை என்று மறுத்து வருகிறார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் தாக்கல் செய்த பிறப்புச் சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றுகள் போலியானது. இத்தகைய சூழலில் மரபணு சோதனை நடத்தினால் மட்டுமே இருவருக்கும் இடையேயான உறவை துல்லியமாக கண்டறிய முடியும். எனவே, எனக்கும், நடிகர் தனுஷுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.