பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்
புதுதில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
நிகழ் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்துகிறார்.
கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ளார்.
ஒருங்கிணைந்த பட்ஜெட் (பொது பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட்) புதன்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு செவ்வாய்க்கிழமை ஜன.3- முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும்.
பின்னர், மார்ச் மாதம் 9-ஆம் தேதி 2-ஆவது அமர்வு தொடங்குகிறது.
ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.
முன்னதாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பலாம் எனத் தெரிகிறது.